இசைஞானி இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ அல்லது உரிமை கோரவோ அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது. 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, உலகளாவிய மற்றும் நிரந்தரமான காப்புரிமையைத் தாங்கள் பெற்றுள்ளதாகச் சரிகம நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆனால், இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி Amazon Music, iTunes, JioSaavn போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் எனச் சரிகம தரப்பு வாதிட்டது. 1957 காப்புரிமைச் சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அந்தத் திரைப்படத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதைச் சரிகம தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, சரிகம நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று இளையராஜாவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
நீதிபதி தனது உத்தரவில், இளையராஜா அல்லது அவர் சார்ந்த பிரதிநிதிகள், சரிகம வசம் உள்ள அந்த 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தடை விதிக்கப்படாவிட்டால் சரிகம நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தீர்ப்பு இசைத் துறை மற்றும் காப்புரிமை விவகாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பா.ம.க. உட்கட்சி மோதல்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி மறுஆய்வு மனு!
இதையும் படிங்க: 2026ல் கூட்டணி ஆட்சி உறுதி... அடித்துச் சொன்ன கிருஷ்ணசாமி... அதிர்ந்து போன அதிமுக...!