ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் திடீரென பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, அந்த மாவட்டமே கலைக்கப்பட்டுள்ளது. பெருந்துறை மற்றும் பவானி சட்டமன்றத் தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இருந்தபோது 2011 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்று முதன்முறையாக எம்எல்ஏ ஆனார். சில மாதங்களிலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவரை வருவாய்த் துறை அமைச்சராக நியமித்தார். இரண்டு ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்த பிறகு சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
கே.ஏ. செங்கோட்டையன் வகித்து வந்த வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியையும், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்து அவருக்கு வழங்கப்பட்டது. அதற்கு முன் ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனும் சு. முத்துசாமியும் முக்கியப் பிரமுகர்களாக இருந்தனர். 2009இல் முத்துசாமி திமுகவில் இணைந்த பிறகு செங்கோட்டையனின் செல்வாக்கு வலுப்பெற்றது. ஆனால் அவரது பதவிகள் பறிக்கப்பட்டதால் மாவட்ட அதிமுக கிட்டத்தட்ட வெங்கடாச்சலத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
இதையும் படிங்க: 5 வருஷத்தில் 5 கட்சி மாறிய அமாவாசை நிர்மல் குமார்: நெல்லையில் ஆர்.பி. உதயகுமார் ஆவேச பேட்டி!

2016இலும் அவர் பெருந்துறையில் மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி-ஓ. பன்னீர்செல்வம் ஆட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2021 தேர்தலில் பெருந்துறை தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாகப் போட்டியிட்டு சுமார் 9,900 வாக்குகள் பெற்றார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். 2025இல் பெருந்துறை-பவானி தொகுதிகளைக் கொண்டு ஈரோடு மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் இரண்டு தொகுதிகளிலும் திமுக வளர்ச்சிக்காக தீவிரமாகப் பணியாற்றினார். இந்தத் தொகுதிகள் நீண்டகாலமாக அதிமுகவின் கோட்டைகளாக இருந்தன. 2026 தேர்தலில் இங்கு வெற்றி பெற்று மு.க. ஸ்டாலினுக்கு அர்ப்பணிப்பேன் என உறுதியளித்துப் பணியாற்றினாலும், அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். வெங்கடாச்சலம் தோல்வியடைந்தார். பின்னர் ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால் பெருந்துறைக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் திமுக மாவட்டப் பொறுப்பில் இருந்து வெங்கடாச்சலம் நீக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது. ஒரு வாரத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் வலுவான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ள நிலையில், வெங்கடாச்சலத்தை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவில் இணையலாம் என்ற பேச்சும் உள்ளது. அவர் எந்தக் கட்சியைத் தேர்ந்தெடுப்பார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்! ஜூலை 30-ல் நேரில் வந்து விளக்கமளிக்க இ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு!