மதுரையில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் (IT Wing) சார்பில் 2026 தேர்தலுக்கானப் புதியப் பிரச்சாரச் செயலியை (App) அறிமுகப்படுத்தி அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
"2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் அதிமுக சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல இந்தப் புதியச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பாஸ்வேர்டு (Password) மற்றும் முழு கட்டுப்பாடு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தோறும் செல்லும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்களிடம் அரிசி, எண்ணெய் உள்ளிட்டப் பொருட்களின் பயன்பாடு மற்றும் தற்போதைய விலை உயர்வு குறித்துத் தகவல்களைச் சேகரிப்பார்கள். இந்தப் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிப்பார்."
திமுக கூட்டணியில் நிலவும் சலசலப்புகள் குறித்தக் கேள்விக்கு, "தேர்தலுக்காக மட்டும் கூட்டணி என்பது போய், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் போன்றக் கட்சிகள் தாலி கட்டிய மனைவி போன்று திமுக-வுடன் ஒட்டிக்கொண்டுள்ளன. காங்கிரஸ் மட்டுமே அவ்வப்போது எதையாவது எதிர்த்துப் பேசுகிறார்கள். திமுக அரசு ஹீரோவா இல்லையா என்று கேட்கிறீர்கள்.. அவர் முதல்வர், ஆனால் மக்கள் அவர் மீது கொதித்துப் போயுள்ளனர். வரும் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது" எனச் சாடினார்.
இதையும் படிங்க: அரசியலில் திருப்பம்: உதயசூரியனா..?? டார்ச்லைட்டா..!! ஸ்டாலினை சந்திக்கப்போகும் கமல்ஹாசன்..??

"தமிழகத்தில் அரிசி, எண்ணெய் விலை விண்ணைத் தொடுகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை கூறக்கூடாது. அதிமுக ஆட்சியில் வெங்காய விலை உயர்ந்தபோது எகிப்திலிருந்து வரவழைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மலிவு விலையில் கொடுத்தோம். ஆனால், திமுக அரசு அத்தகையத் துரித நடவடிக்கைகளை எடுப்பதில்லை. தாலிக்குத் தங்கம், லேப்டாப் போன்றத் திட்டங்களை முடக்கியதுதான் இவர்களின் சாதனை" எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் போது ஒருவர் இருமியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த செல்லூர் ராஜூ, "என்னப்பா.. சிக்கன் குனியாவைப் பரப்பிவிட்டுடாதீங்க. வரும்போது மாஸ்க் அணிந்து வந்திருக்க வேண்டும்" எனக் கிண்டலாகக் கூறிப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்தார். 2026-ஆம் ஆண்டின் ரியல் ஹீரோ எடப்பாடி பழனிசாமி தான் என்றும், அவரே மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் கூறித் தனதுப் பேட்டியை முடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!