திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெறவிருக்கும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, கட்சியின் இளம் தலைமுறையை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது. திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் இளைஞரணியை மேலும் பலமாக்கும் நோக்கில் இத்தகைய மண்டல அளவிலான சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.இந்நிகழ்வு திருவண்ணாமலை கலைஞர் திடலில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 29 கழக மாவட்டங்கள் மற்றும் 91 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர். திமுக இளைஞரணி 1980-ஆம் ஆண்டு மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு, கட்சியின் முதுகெலும்பாக விளங்கி வருகிறது.
இதையும் படிங்க: நான் எந்த தவறும் செய்யல... ரூ.1020 கோடி ஊழல் குற்றச்சாட்டை திட்டவட்டமாக இருக்கும் கே.என். நேரு...!
தற்போது மாநிலம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகளும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் அரசியல் அமைப்புகளில் ஒன்றாக இது திகழ்கிறது. இச்சந்திப்பு 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை திரட்டி, திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான அடித்தளமாக அமையும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ரூ.1020 கோடி ஊழல்... கே. என். நேருவை விடாதீங்க... அதிமுக லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு...!