தி.மு.க.வில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலர்களின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரிக்கும் முக்கிய முடிவை கட்சி தலைமை எடுத்துள்ளது. தற்போது வாசுதவேநல்லூர் எம்.எல்.ஏ. ராஜா, முன்னாள் அமைச்சர் சி.வி. கணேசன், திருவள்ளூர் ரமேஷ் ஆகிய மூவரே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலர்களாக உள்ளனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அமைச்சரவையில் ஏழு பட்டியலின அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், தி.மு.க. தனது அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) கூட்டணியில் இருந்து வெளியேறியதும் இந்த நடவடிக்கைக்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பட்டியலின மக்களின் ஆதரவை தக்கவைக்கும் வகையில், அந்த சமூகத்தைச் சேர்ந்த 20 பேருக்கு மாவட்ட செயலர் பதவி வழங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் விவகாரம் குறித்து வாய் திறக்கக் கூடாது!! முதல்வர் விஜய் பேசுவதை தடுக்க திமுக மும்முரம்!
கள ஆய்வுக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு கட்சியின் அமைப்பை 110 மாவட்டங்களாக பிரிக்கவும் தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் உள்ள தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், சக்கரபாணி, சிவசங்கர், தமிழரசி, அப்துல்லா, பரந்தாமன், எழிலன், முரசொலி, கருணா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேற்று சென்னை அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். மாவட்ட செயலர்கள் நியமனம் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பட்டியலின சமூக மக்களிடையே தி.மு.க.வுக்கு இருக்கும் பாரம்பரிய ஆதரவை தக்க வைக்கவும், த.வெ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வளர்ச்சியை சமாளிக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலர்கள் நியமனம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு தி.மு.க.வின் அடித்தளத்தை வலுப்படுத்தும் முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எனக்கு தெரியாம எதுக்கு இப்படி பண்ணீங்க!! உதயநிதி ஸ்டாலின், சபரீசனை கடிந்துகொண்ட மு.க.ஸ்டாலின்!