தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், சென்னையின் மிக முக்கியமானத் தொகுதிகளில் ஒன்றான துறைமுகம் (Harbour) தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க வேட்பாளரும் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) வேட்பாளர் சினோரா பி.எஸ். அசோக் ஆகியோரின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல், தள்ளுமுள்ளு வரை சென்றது.
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், துறைமுகம் தொகுதியில் உள்ள ஒரு சில வாக்குச்சாவடிகளில் 'பூத் ரிக்ஸிங்' எனப்படும் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே நேருக்கு நேர் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் ஒரே இடத்தில் திரண்டதால், அங்கு ஒருவரையொருவர் தள்ளிக் கொள்ளும் சூழல் உருவாகித் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் உடனடியாகத் தலையிட்டனர்.
இதையும் படிங்க: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் நான் தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
இரு தரப்பினரையும் கலைந்து செல்லுமாறு எச்சரித்த போலீஸார், வாக்குச்சாவடிக்கு வெளியே கூடுதல் பாதுகாப்புப் படையினரைக் குவித்தனர். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு, நிலைமை சீரானது. இருப்பினும், அந்தப் பகுதியில் நாள் முழுவதும் ஒருவிதப் புகைச்சல் நீடித்தது.
சென்னையின் மிகச் சிறிய தொகுதியான துறைமுகத்தில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி சுமார் 68.60% வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணி நிலவரப்படி இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 75-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்திய மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள இந்தத் தொகுதியில், இம்முறை கடும் போட்டி நிலவுகிறது.
இந்தத் தொகுதியில் ஏற்கனவே பண விநியோகம் தொடர்பாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற இந்த மோதல் சம்பவம், தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மே மாதம் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: சென்னையில் ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் பரப்புரை! திமுகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!