மாஞ்சோலை மற்றும் மேகமலைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு மக்கள் நலத் திட்டங்களைத் தாரைவார்க்கும் தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மதுரை பாண்டியன் விடுதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரச் சிக்கல் குறித்து விரிவாகப் பேசினார். ஐந்து தலைமுறைகளாக மாஞ்சோலை மற்றும் மேகமலைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் என்ன என்பதைத் தமிழக அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை; அவர்களை அங்கிருந்து எக்காரணம் கொண்டும் வெளியேற்றக் கூடாது. இத்தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு உடனடியாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நிர்வகித்த பாம்பே டிரேடிங் கம்பெனி அரசுக்குச் செலுத்த வேண்டிய ₹4,655 கோடி நிலுவைத் தொகையை வைத்துவிட்டுச் சென்றுள்ள நிலையில், அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் மீது அரசு எவ்வித சொத்து பறிமுதல் நடவடிக்கையும் எடுக்காமல் அனுமதிப்பது ஏன்? அந்த நிலுவைத் தொகையை வசூலித்தாலே மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக மேம்படுத்தியிருக்க முடியும். இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி மதுரையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனப் பிரகடனம் செய்தார்.
இதையும் படிங்க: ‘அமரன்’ பட விவகாரம்! தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? நயினார் கேள்வி!
தொடர்ந்து தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தவெக கூட்டணி முரண்பாடுகள் குறித்துப் பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசிவிட்டு, தற்போது அதே திமுகவுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து தவெக ஆட்சி அமைத்துள்ளது; ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை விஜய் என விமர்சித்த விசிக, தற்போது அதே ஆட்சியின் பங்காளியாக அமர்ந்துள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை பெயரைச் சமூக நீதித்துறை என மாற்றியபோது வரவேற்ற விசிகவினர், தற்போது மீண்டும் பழைய பெயருக்கே மாற்ற வேண்டும் எனக் கூறுவது அப்பட்டமான இரட்டை நிலைப்பாடு. இத்தகைய போக்கையும் அமைச்சர் வன்னி அரசையும் கண்டித்து வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
அரசின் நலத்திட்டச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த டாக்டர் கிருஷ்ணசாமி, பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை முதலில் அனைவருக்கும் என்றார்கள்; தற்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே என மாற்றி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்கள். இத்திட்டத்தையும், காமராஜர் காலை உணவுத் திட்டத்தையும் உள்ளூர் நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களைப் புறந்தள்ளிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்ப்பது ஏற்கத்தக்கதல்ல.
திமுகவின் 50-க்கும் மேற்பட்ட திட்டங்களை ரத்து செய்துவிட்டு, தனிநபர் பிம்ப அரசியலை மட்டுமே நம்பி ஆட்சி நடத்துவது பேராபத்தில் முடியும். தமிழகத்தில் நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் பெருகிச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; ஒரு குறிப்பிட்ட சாதியையோ, மதத்தையோ முன்னிறுத்தாமல் அனைத்து மக்களுக்குமான ஆட்சியாக இது மாற வேண்டும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: பூச்சாண்டி காட்டாதீங்க விஜய்! அந்த ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்! ஆர்.எஸ். பாரதி சவால்!