மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளிச் சேர்க்கையின் போது அவமானப்படுத்தப்பட்ட மனவேதனையில் 16 வயது தலித் சிறுமி உயிரை மாய்த்துக் கொண்ட கோரச் சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தித் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவரும் எம்பியுமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், பள்ளிக் கல்விச் சூழலில் நிகழும் இத்தகைய சாதிய மற்றும் மனிதநேயமற்ற பாகுபாடுகள் குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது; தனது எதிர்காலம் குறித்த அளப்பரிய நம்பிக்கையுடனும் கனவுகளுடனும் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்குள்ளவர்களால் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சொல்லொணா மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனால் அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் நிலைகுலைந்து போயுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கான உரிமைகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், சமத்துவமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் மறுக்க முடியாத அடிப்படை உரிமையாகும்; எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும் பள்ளிக்கூடங்களில் இது போன்ற நெஞ்சை உலுக்கும் மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் ஒருபோதும் தள்ளப்படக் கூடாது. இத்தகைய கொடூரச் சம்பவங்கள் கல்வித்துறையின் மாண்பையே கேள்விக்குறியாக்குகின்றன எனச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: "CHENNAI DAY"..! கோடிக்கணக்கான கனவுகளை தாங்கும் தாய்... கனிமொழி MP பெருமிதம்.!!
எனவே, உசிலம்பட்டி மாணவி மரணம் தொடர்பாகத் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து பாரபட்சமற்ற தீவிர விசாரணையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும், சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய மற்றும் அவமானப்படுத்திய அனைத்துக் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக அரசின் கார்ப்பரேட் ஆதிக்கமும் இரட்டை நிலைப்பாடும்! டாக்டர் க. கிருஷ்ணசாமி அனல் பறக்கும் குற்றச்சாட்டு!