தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.23.50 லட்சம் ரொக்கப் பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் தலைமையிலான தேர்தல் பாதுகாப்புக் குழுவினர், இன்று நிலையத்தின் 4-வது நடைமேடையில் (Platform 4) தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒரு நபரைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 42 வயதான கஜானன் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த பையைச் சோதனையிட்டபோது, அதில் கட்டுக் கட்டாக ரூ.23,50,000/- ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அம்மா இருந்தவரை எல்லாம் வாலை சுருட்டிட்டு இருந்துச்சு! மன்னார்குடியில் சசிகலா அதிரடி!

பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து கஜானனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்: அந்தப் பணம் தொழில் நிமித்தமாக எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்தப் பணத்திற்குரிய முறையான ஆவணங்கள் மற்றும் கணக்கு விபரங்கள் அவரிடம் இல்லாததால், பணம் மற்றும் பை ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகையும் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைக்காகச் சென்னை வருமான வரித்துறையிடம் (Income Tax Department) ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் பறக்கும் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்களது கண்காணிப்பைச் சல்லடை போட்டுத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பச்சோந்திக்கே டஃப் கொடுக்கும் பழனிசாமி! வேலூர் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!