வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார். பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த திமுக மாடல் அரசு நினைத்துக்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையில், மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாகாவும் இதர துறைகள் திறக்கப்படுமா என்பது வேலூர் மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், இம்மருத்துவமனையில் செயல்பட உள்ள மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் தேவைப்படும் மருத்துவர்களும், செவிலியர்களும், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அயற்பணியில் மாற்றப்பட உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: வீதியில் மாம்பழங்கள்... வறுமையில் விவசாயிகள்...பிரமருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்!

ஏற்கெனவே, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு துறையில் 31 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 8 பேர் மட்டுமே பணியாற்றும் நிலையில், இவர்கள் எப்படி இரண்டு இடங்களிலும் முழுமையாக கவனம் செலுத்தி பணியாற்ற முடியும் என்பது தெரியவில்லை என்றும் யார் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலையில்லை என்ற ஒரே குறிக்கோளோடு இந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதால்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்த தமிழக மருத்துவத் துறை இன்றைக்கு பின்தங்கி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை என தெரிவித்தார்.

மேலும் இந்தத் துறையை நிர்வகிக்கும் அமைச்சர் சுப்பிரமணியன், வாய்ப் பந்தல் போட்டு உண்மையை மறைத்துவிடலாம் என்று கருதுவது வேடிக்கையாக உள்ளது எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிர்வாகத் திறனற்ற ஆட்சியாளர்களின் செயல்பாடுகளுக்கு 2026 தேர்தல் கண்டிப்பாக பதிலடி தரும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
இதையும் படிங்க: திமுக கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் அணி பொறுப்பாளர்கள் நியமனம்... தலைமை கழகம் அறிவிப்பு