அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் கட்சி வெளியேறியுள்ள சூழலில், அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கிருஷ்ணசாமி அவர்கள் கண்ணியமாக நடத்தப்படவில்லை என்றும், உரிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றும் புகார் கூறியிருந்த நிலையில், அதற்குப் புள்ளிவிவரங்களுடன் இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணசாமி எங்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. மாறாக, வேறு ஒரு நபர் மூலம் முதலில் 10 இடங்களைக் கேட்டார். பின்னர் அதனை 5 இடங்களாகக் குறைத்துக் கேட்டார். ஆனால், எங்களால் அத்தனை இடங்களைக் கொடுக்க முடியாது என்று நேரடியாகவே சொல்லிவிட்டோம்" என இபிஎஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
ஒரு கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அவர்களின் வாக்கு வங்கியின் அடிப்படையில்தான் அமையும் என்று குறிப்பிட்ட இபிஎஸ், "கடந்த தேர்தல்களில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 33,000 வாக்குகளைத்தான் புதிய தமிழகம் கட்சி பெற்றுள்ளது. இந்த எதார்த்தத்தை மறைத்துவிட்டு அதிக இடங்களைக் கேட்பது நியாயமல்ல" என்று சாடினார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்குத் தகுதியான இடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தன்னிச்சையாக முடிவெடுத்து வெளியேறிய கிருஷ்ணசாமியின் செயல் வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, பாமக, அமமுக மற்றும் தேமுதிக போன்ற முக்கியக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தென் மாவட்டங்களில் தலித் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கருதப்படும் கிருஷ்ணசாமியின் வெளியேற்றம் அதிமுக-விற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும், அதிமுக ஒரு மாபெரும் இயக்கம்; எதார்த்தமான பலத்தின் அடிப்படையிலேயே இடங்கள் ஒதுக்கப்படும் என்பதில் எடப்பாடியார் உறுதியாக உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இபிஎஸ் அவர்களின் இந்தத் தெளிவான பதில் தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக-தான் கூட்டணியின் தலைமை! நானே முதல்வர் வேட்பாளர்! எடப்பாடியார் அதிரடி பிரசாரம்!