சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் முதல் கட்சியாக அதிமுக முதற்கட்ட வாக்குறுதியை வெளியிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டார். இதனை அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக்கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார். இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட நாயகன் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு "டூப்" போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இனி மகளிர் தொகை ரூ.2000..! 5 முக்கிய தேர்தல் வாக்குறுதி கொடுத்த EPS..!
2021ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் பழனிசாமி என்றும் ஆனால், தமிழ்நாட்டை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் நம் திராவிட நாயகன் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார் எனவும் கூறியுள்ளார்.
இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக என விமர்சித்தார். அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு இருக்கிறார் என்றும் இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க., உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம் எனவும் கூறிய அமைச்சர் டிஆர்பி ராஜா, எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம் என்றும் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: எங்க வாத்தியாரு..! எம்ஜிஆர் பிறந்த நாள்... மரியாதை செலுத்திய இபிஎஸ்..!