தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுவதற்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வருகை தருவது வழக்கம். ஏழை எளிய மக்கள் சிறந்த முறையில் சிகிச்சை பெறுவதற்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பேருதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் போலி மருத்துவர் ஒருவர், நோயாளியிடம் இருந்து நகைகள் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 6 ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார். நோயாளிகளில் ஒருவரை ஸ்கேனுக்கு அழைத்துச் செல்வதாக கூறி நகை மற்றும் செல்போன்களை வாங்கியுள்ளார். ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக் கூறி அவரிடம் திருடி சென்றுள்ளார். மூன்று சவரன் தங்க நகை மற்றும் செல்போனை தன்னிடமிருந்து பறித்துச் சென்றதாக நோயாளி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தனிப்படை அமைத்து போலி மருத்துவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி! பொதுமக்கள் கலக்கம்...

இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது. மர்ம நபர் ஒருவர் மருத்துவரைப் போன்றே உடை அணிந்து கொண்டு வளம் வந்ததுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.பிரபலமான அரசு மருத்துவமனையில் அசால்டாக போலி மருத்துவர் உலாவிய சம்பவம் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முக்கிய ஆவணங்கள் திருட்டு.. போலீஸ் விசாரணை வளையத்துக்குள் ராஜ்பவன் ஊழியர்கள்!