தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கூட்டணித் தலைவர்களின் உறுதிப்பாட்டைப் பாராட்டியும், எதிர்காலப் பயணம் குறித்தும் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்தல் களத்தில் திமுகவுடன் இணைந்து பணியாற்றிய கட்சிகளின் தலைவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள அவர், பின்வரும் கருத்துகளை முன்வைத்துள்ளார்:
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பாலான தோழமைக் கட்சிகள் கொள்கைத் தோழமையுணர்வு மாறாமல், திமுகவுடன் தொடர்ந்து பயணிப்பதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், தேர்தல் களத்தில் வழங்கிய ஒத்துழைப்பையும் என்றும் மறக்க மாட்டேன் என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கொள்கை உறுதிமிக்க அரசியல் கட்சிகளாக நாம் ஒன்றுபட்டு நின்று, மக்கள் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் நமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என அவர் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதில் திமுகவின் பங்களிப்பை வலியுறுத்திய அவர் தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும் எனத் தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார். மாநில உரிமைகளுக்காக எப்போதும் போல நமது பயணம் தொடரும் என்பதையும் அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!
சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக வெளிநடப்பு செய்துள்ள சூழலில், கூட்டணிக் கட்சிகள் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்பதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!