தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சதுரங்கம், ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பிலும் அசாத்திய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசின் மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்எல்ஏ-க்களின் கட்சிப் பதவிகள் அண்மையில் பறிக்கப்பட்டன. இதில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை இழந்த முன்னாள் அமைச்சர் திரு. சி. விஜயபாஸ்கர் அவர்களின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து, தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது மாபெரும் புயலே கிளம்பியுள்ளது.
மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விராலிமலை சட்டமன்ற உறுப்பினரான சி. விஜயபாஸ்கர் ஏற்கனவே இலுப்பூரில் உள்ள தனது இல்லத்தில் இரண்டு முறை ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், இன்று மூன்றாவது முறையாகப் புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அசாத்திய அளவில் ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரண்டனர். அப்போது திரண்டிருந்த தொண்டர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அசைக்க முடியாத அடையாளம், எங்களின் நிரந்தர அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வாழ்க! என்று அதிரடியாக முழக்கங்களை எழுப்பியதால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்தது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராகப் புதியதாகப் பழனிவேல் நியமிக்கப்பட்டதற்கு விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 15 நாட்களாக அதிமுக மாவட்ட அலுவலகம் பூட்டப்பட்டுப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. நேற்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தின் முடிவில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைத் தவிர்க்கும் பொருட்டு, விஜயபாஸ்கர் தரப்பினர் நேற்றிரவு மாவட்ட அலுவலகச் சாவியைப் புதிய நிர்வாகியிடம் ஒப்படைத்தனர். இன்று பழனிவேல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டதும், அங்கிருந்த விஜயபாஸ்கரின் படங்கள் அசுர வேகத்தில் அப்புறப்படுத்தப்பட்டன. இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சி. விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட அலுவலகத்தின் சாவியைப் பெருந்தன்மையோடு நாங்கள் புதிய தரப்பிடம் ஒப்படைத்துள்ளோம். இளம் வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 5 முறை நின்று 5 முறையும் வெற்றி பெற்றுப் புதுக்கோட்டைக்கு எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களைச் செய்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய காரசாரமான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், பத்திரிகைகளின் பரபரப்புக்கும் யூகங்களுக்கும் என்னால் எந்தச் செய்தியையும் தற்பொழுது சொல்ல முடியாது; அதுமாதிரி எந்தவொரு செய்தியும் என்னிடம் இல்லை. கடந்த நான்கு தினங்களாக விராலிமலை தொகுதியில் வாக்களித்த வாக்காளர் தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை முடித்துவிட்டு இன்றுதான் புதுக்கோட்டைக்கு வந்தேன். நிர்வாகிகள் என்னைச் சந்திக்க வந்துள்ளனர், அவ்வளவுதான் என்று கூறிவிட்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இன்றும் நீங்கள் அதிமுகவில் தான் தொடர்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கறாராகக் கேட்ட கேள்விக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் சி. விஜயபாஸ்கர் மௌனமாக நகர்ந்தார். எப்போதும் ஜெயலலிதா, எம்ஜிஆர் வழியில் தொடர்கிறேன் என்று கூறும் அவர், இன்று அந்தச் சொல்லாடலையும் பயன்படுத்தவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது. எனினும், அவர் இன்றும் அதிமுக கொடி கட்டிய, ஜெயலலிதா புகைப்படம் கொண்ட காரில் தான் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் இரண்டாவது பிரிவாகச் செயல்பட்ட எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மீண்டும் இபிஎஸ்-ஸைச் சந்தித்து இணைந்த நிலையில், சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவர் மட்டும் இன்னும் இபிஎஸ்-ஸைச் சந்திக்காமல் தங்களது தனித்துவத்தைக் காட்டி வருகின்றனர். இதற்கிடையில், விஜயபாஸ்கரின் முக்கிய ஆதரவாளர்கள் பலரும் தவெக-வில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!