அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்குவது தொடர்பான கோரிக்கை மனுவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பரிசீலிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த திசை இந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதி உள்ளது. ஆனால், அரசுச் சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த இலவசப் பேருந்து பயண அட்டைத் திட்டம் வழங்கப்படுவதில்லை. எனவே, சட்டக் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் இலவசப் பேருந்து பயண அட்டைத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசுப் பள்ளி மற்றும் இதர அரசுப் பொதுக் கல்லூரி மாணவர்களுக்கு இருக்கும் இந்தச் சலுகை, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மறுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: இனி ஆயுசுக்கும் ஜெயில்தான்! காசியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்!
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசின் தற்போதைய போக்குவரத்துத் திட்டங்களைச் சுட்டிக்காட்டி முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிர்கள் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு இருக்கும் பொழுது, அரசுச் சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மனுதாரர் அளித்துள்ள இந்த நியாயமான கோரிக்கை மனுவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் முறைப்படி பரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவை அமுல்படுத்த அறிவுறுத்தி, இந்த விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கைத் நீதிமன்றம் முடித்து வைத்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, அரசுச் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இலவசப் பேருந்து வசதி விரைவில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!