அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தொடுத்து வரும் போர் என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒருபுறம் ஈரான் அரபு நாடுகள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாலும், மற்றொருபுறம் ஹார்மூஸ் நீரிணையை மூடிவிட்டதாலும் உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பெட்ரோலிய பொருட்களுடைய இருப்பு என்பது குறைந்து வருவதாக தகவல்கள் பரவின. இருப்பினும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையான அளவு கையிருப்பு இருப்பதாக மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்களும், மத்திய அரசும் உறுதிப்படுத்தி வருகிறது.
அதேபோல் இந்துஸ்தான் பெட்ரோலியம், ஐஓசி, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய அரசு எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விநியோகத்தில் மக்களுக்கே முன்னுரிமை கொடுத்து சப்ளை செய்ய வேண்டும் என்றும், வணிக ரீதியிலான பயன்பட்டிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமனிதர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களை விநியோகிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சோசியல் மீடியாக்களில் பரவும் தவறான தகவல்கள் மக்களை பதற்றமடைய செய்துள்ளது.
இன்று காலை முதலே பல்வேறு பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இருப்பு என்பது குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் பங்குகளுக்கு வாடிக்கையாக பெரிய லாரிகளில் வரக்கூடிய பெட்ரோலிய பொருட்களுடைய வருகை என்பது குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நாளை பெட்ரோல் கிடைக்குமோ, கிடைக்காதோ என பதற்றமடைந்த மக்கள் நேற்று இரவு முதலே பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். விடிய, விடிய நீண்ட வரிசைகளில் காத்திருந்து தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் டேங்குகளை முழுமையாக நிரப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!
தமிழகத்தில் விழுப்புரம், குடியாத்தம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. பேனிக் பையிங் என்று சொல்லக்கூடிய பதட்டத்தின் காரணமாக மக்கள் அதிக அளவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை வீடுகளுக்குள் வாங்கி ஸ்டாக் வைக்கத் தொடங்கியுள்ளனர். பைக், கார் போன்ற வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவது மட்டுமின்றி, கையில் கிடைக்கும் 1 லிட்டர் முதல் 10 லிட்டர் வரையிலான வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். குறிப்பாக புதுச்சேரியில் 20 லிட்டர் கேன்களில் பெட்ரோல் பிடித்துச் செல்லும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒரே சமயத்தில் அதிக அளவிலான மக்கள் படையெடுப்பதால் பெட்ரோல் பங்குகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகரித்துள்ளது. வழக்கமாக இருந்ததை விட அதிக வாகனங்கள் வருவதால் தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வாகனங்களின் வரிசை அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் இல்லை என்றால் அன்றாடம் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாமல் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பொதுமக்கள் அறியும் வண்ணம் உறுதிபடுத்தினால் மட்டுமே இந்த பதற்றத்தை தணிக்க முடியும். தேவையான அளவில் எரிபொருள் கிடைக்கும் என்ற உறுதியான தகவல்கள் வெளியானால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் குறையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தற்போது சென்னையின் பல பகுதிகளில் பெட்ரோல் பங்குகளுக்கு வாகன ஓட்டிகள் தொடர்ந்து வந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருப்பதால், அங்கு வழக்கத்தை விட அதிகமான கூட்டம் நிலவி வருகிறது.
சில பெட்ரோல் பங்குகள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடினர். இதனால் அடுத்தடுத்த பெட்ரோல் பங்குகளுக்கு வாகன ஓட்டிகள் சென்றதால் வாகன நெரிசல் ஏற்பட்டது . பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் வாங்க பெண்கள் சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் குவிந்ததால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது. சிலர் பெட்ரோல் பங்குகளில் நிலவிய கூட்டத்தை சமாளிக்க காவல்துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!