தமிழகத்தில் சமையலுக்குப் பயன்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த இரண்டு மாதங்களில் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகளின் மாதாந்திர பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரிசி, மிளகாய் வற்றல், தனியா, பூண்டு, சமையல் எண்ணெய், வெல்லம் உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
அரிசி விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படுகிறது. கிலோவுக்கு ₹8 முதல் ₹15 வரை விலை கூடியுள்ளது. 26 கிலோ சாப்பாட்டு அரிசி மூட்டை ₹300 முதல் ₹500 வரை உயர்ந்துள்ளது. முன்பு ₹1,000-க்கு விற்ற மூட்டை இப்போது ₹1,500 ஆகவும், ₹1,500 மூட்டை ₹2,000 ஆகவும் மாறியுள்ளது. அரிசி வியாபாரிகள் தெரிவிக்கும்படி, இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் நெல் வரத்து குறைந்ததே.
தமிழகத்திற்கு அரிசி பெரும்பாலும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலிருந்து வருகிறது. அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைந்ததால் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதிய அரிசி வரத்து தொடங்கும் டிசம்பர் வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: மக்களுக்கு நிவாரணம்: குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை! மத்திய அரசு அதிரடி!!
மிளகாய் வற்றல் கடந்த மாதம் கிலோ ₹220-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ₹270 முதல் ₹300 வரை உயர்ந்துள்ளது. தனியா ₹150-லிருந்து ₹220 ஆக உயர்ந்துள்ளது. பூண்டு விலை இரண்டு மடங்கு அதிகரித்து கிலோ ₹150-லிருந்து ₹280-₹300 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. சூரியகாந்தி ரீபைன்ட் எண்ணெய் கிலோ ₹120-லிருந்து ₹150 ஆகவும், பாமாயில் ₹150-லிருந்து ₹185 ஆகவும் உயர்ந்துள்ளது. வெல்லம் ₹50-லிருந்து ₹100 ஆகவும், முந்திரி ₹700-லிருந்து ₹950 ஆகவும், பாதாம் பருப்பு ₹250-லிருந்து ₹1,200 ஆகவும் அதிகரித்துள்ளது. சர்க்கரை மட்டும் ₹70-லிருந்து ₹55 ஆகக் குறைந்துள்ளது.
காய்கறிகளிலும் விலை உயர்வு தொடர்கிறது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகியவற்றின் வரத்து குறைந்ததால் விலை கூடியுள்ளது. தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு கிலோவுக்கு ₹10 முதல் ₹15 வரை அதிகரித்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வால் மாதாந்திர குடும்பச் செலவு அதிகரித்து, பட்ஜெட்டில் துண்டு விழுகிறது.
போதுமான அளவு பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இது பொதுமக்களை மேலும் பாதிக்கும் என்பதால், அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். அரசு தலையீடு அவசியம் என்ற குரல்கள் வலுப்பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!