திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 6, 7 மற்றும் 8 வயது மூன்று சிறுமிகளை மிரட்டி ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளி ஆனந்த் சேகர் என்பவருக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஆனந்த் சேகர் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். திருமணமாகி மனைவி மற்றும் 3 வயது குழந்தை உள்ள நிலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். 2023ஆம் ஆண்டு ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளை அவர் மிரட்டி அழைத்துச் சென்றார். அவரது வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில், அந்த வீட்டைப் பயன்படுத்தி சிறுமிகள் மீது கொடூரமான பாலியல் வன்கொடுமையைப் புரிந்தார். மேலும், சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவர்களை உயிருக்கு மிரட்டியும் வீட்டுக்கு அனுப்பினார்.

சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களைப் பெற்றோர் கவனித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, கண்ணீருடன் நடந்த கொடூரத்தை சிறுமிகள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த் சேகரை விரைவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: விறுவிறு அரசியல்... ஒரே இடத்தில் கூடும் தவெக தோழமை கட்சிகள்..! CPM சண்முகத்துக்கு நேரில் அழைப்பு..!!
நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. சுரேஷ்குமார் இந்த வழக்கை விசாரித்தார். சாட்சியங்கள், சிறுமிகளின் வாக்குமூலங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து, குற்றவாளி ஆனந்த் சேகர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்தார். இந்தக் குற்றத்தை அரிதிலும் அரிதான வழக்கு என வகைப்படுத்திய நீதிபதி, ஆனந்த் சேகருக்கு தூக்கு தண்டனை விதித்தார். மேலும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கினார். பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 2 போதை ஊசி மரணங்கள்..! அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? வலுக்கும் கண்டனம்..!!