நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள்; சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வை, தேசிய தேர்வுகள் முகமையான, என்.டி.ஏ., நடத்துகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேரவும், 'நீட்' தேர்வு கட்டாயம்.

இந்த நிலையில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. இதில், 20 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அன்றைய தினம் சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்தது. கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே கே நகர் பத்ம சேஷாத்திரி மாணவர் ஒருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: 'NEET' ரிசல்ட் வெளியிட தடை.. மாணவி அளித்த புகாரில் ம.பி ஐகோர்ட் உத்தரவு..!

அதில், நாங்கள் ஆவடியில் உள்ள ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வை எழுதினோம். தேர்வு விதிகளின்படி காலை 11 மணிக்கு பள்ளிக்குள் சென்று விட்டோம். பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணி வரை தேர்வு நடந்தது. அன்று சுமார் 2.45 மணிக்கு மேகம் கருத்து, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஜெனரேட்டர், இன்வெட்டர் வசதிகள் அந்த பள்ளியில் இல்லை. இதனால், 3 மணி முதல் 4.15 மணி வரை குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதினோம்.

அதுமட்டுமல்ல மழை நீர் வகுப்பறைக்குள் புகுந்து தேர்வு எழுத முடியாத வகையில் மேலும் சிரமத்தை தந்தது. எங்களால் முடிந்த அளவுக்கு தேர்வை எழுதினோம். அதேநேரம், 3 மணி நேரம் போதாது, எங்களுக்கு கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால், தேர்வு மைய அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. கூடுதல் நேரத்தையும் வழங்கவில்லை. இதனால், தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை.தேர்வு மையத்துக்கு வெளியில் இருந்த பெற்றோர்களிடம் மாணவர்கள் இதுகுறித்து கூறியதால், தேர்வு மையத்துக்கு வெளியில் போராட்டம் நடந்தது.
பின்னர், அன்றைய தினமே தேசிய தேர்வு முகமைக்கு ‘இ-மெயில்’ மூலம் புகார் மனு அனுப்பி, மறு தேர்வு நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தோம். இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ‘நீட்’ என்பது மருத்துவ படிப்புக்கான தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு ஆகும். இதுபோல சிறு இடையூறுகளினால், தேர்வு எழுத முடியாமல், எங்களை போன்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மனவேதனையில் உள்ளோம். ‘நீட்’ தேர்வு முடிவு ஜூன் 14-ந்தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, எங்களது கோரிக்கையின் அடிப்படையில், எங்களுக்கு ‘நீட்’ தேர்வை மீண்டும் நடத்தும்படி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிட வேண்டும். அதுவரை ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் சாய்கிருஷ்ணா, இஸ்மாயில் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, தேர்வு நாளில் மின் தடை ஏற்பட்டு மாணவர்களுக்கு தேர்வு எழுத சிரமம் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரித்து, மறு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து, இந்த வழக்கிற்கு வருகிற 2-ந்தேதிக்குள் மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை இயக்குனர் ஜெனரல், தமிழ்நாடு பொது மருத்துவ சேவை இயக்குனர் ஆகியோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், மின் தடையால் நீட் தேர்வு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்ததாகவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், தீர்ப்புக்காக இன்று (ஜூன்.6) தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும், நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில், சில மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'NEET' ரிசல்ட் வெளியிட தடை.. மாணவி அளித்த புகாரில் ம.பி ஐகோர்ட் உத்தரவு..!