மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான போர் சூழல் உலகின் இயற்கை எரிவாயு சந்தையை பெரிதும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதி நாடான கத்தாரின் உற்பத்தி அமைப்புகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல், கத்தாரின் எரிவாயு ஏற்றுமதித் திறனை 17 சதவீதம் அளவுக்கு சேதப்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்பு அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என 'கத்தார் எனர்ஜி' நிறுவனம் தெரிவித்துள்ளது.
கத்தாரின் ராஸ் லாஃபான் தொழிற்துறை வளாகத்தில் உள்ள இரண்டு முக்கிய எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) உற்பத்தி அலகுகள் மற்றும் ஒரு கேஸ்-டு-லிக்விட் வசதி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
இதனால் ஆண்டுக்கு 1.28 கோடி டன் உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது சுமார் 1,700 கோடி கன மீட்டர் எரிவாயுவுக்கு சமம். இந்த இழப்பு கத்தாருக்கு ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்! இந்திய விமான நிறுவனங்களுக்கு பறந்த ஹை அலர்ட்!
இந்த அவசர நிலையை அடுத்து கத்தார் எனர்ஜி 'போர்ஸ் மெஜர்' (Force Majeure) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்டகால ஒப்பந்தங்கள் செய்துள்ள நாடுகளுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட அளவு எரிவாயு வழங்க முடியாது என்றும், சாத்தியமான அளவு மட்டுமே அனுப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக பிரச்னை அல்ல; அடிப்படை உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான விரிசல் என்பதால், உடனடி மாற்று ஏற்பாடுகள் கடினம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிக நம்பகமான எரிவாயு வினியோகஸ்தராகக் கருதப்படும் கத்தார், இந்தியாவின் முக்கிய சப்ளையர். இந்தியா தன் எல்என்ஜி தேவையில் சுமார் 40 சதவீதத்தை கத்தாரிடமிருந்து பெறுகிறது.
எனவே, இந்தப் பாதிப்பு இந்தியாவுக்கு நேரடியாகவும் கணிசமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை கூர்மையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி ஒப்பந்தம் இல்லாத நாடுகளும் மறைமுகமாக பாதிக்கப்படும்.
குறுகிய காலத்தில் முழு அளவிலான மாற்று வினியோகத்தை உறுதி செய்ய முடியாது என்பதால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் சிரமத்தை எதிர்கொள்ளும். இருப்பினும், இந்தியாவின் எரிவாயு உள்கட்டமைப்பு முழுமையாக பலவீனமடையவில்லை என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். விலை உயர்வு மற்றும் வினியோக பற்றாக்குறை ஆகியவை தொழில்துறை, உர உற்பத்தி, மின்சாரம், சிஎன்ஜி உள்ளிட்ட பல துறைகளை பாதிக்கும்.
இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மாற்று வழிகளை தீவிரமாக தேடி வருகிறது. ஏப்ரல் மாதம் இரண்டாம் பாதியில் மேற்கு ஆப்ரிக்கா அல்லது வடக்கு கடற்பகுதி நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மேலும், மே 6 முதல் 15 வரை ஆசியா-பசிபிக் பகுதியிலிருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது எரிவாயு பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு போர் விரிவடைந்தால் உலக எரிசக்தி சந்தை மேலும் கொந்தளிக்கும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகள் மாற்று சப்ளையர்களுடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்தி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இதையும் படிங்க: வளைகுடா நாடுகளின் வளங்கள் சூறை! ஈரான் தாண்டவம்! கத்தார் எரிவாயு நிலையம் சேதம்! கச்சா எண்ணெய் விலை உயர்வு!