தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக நீர்வளத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ₹42 கோடி மதிப்பிலான 202 டெண்டர்களில் மிகப் பெரிய அளவில் குளறுபடிகளும் முறைகேடுகளும் அரங்கேறி வருவதாகவும், தவெக அரசு வாக்குறுதி அளித்த 'நிர்வாக மாற்றம்' என்பது இதுதானா என்றும் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், தமிழக நீர்வளத்துறையின் டெண்டர் நடைமுறைகளில் உள்ள வெளிப்படைத்தன்மையற்ற சூழலை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டுள்ளார். தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக நீர்வளத்துறை ஒதுக்கியுள்ள ₹42 கோடி மதிப்பிலான 202 டெண்டர்களில் மெகா முறைகேடுகள் நடைபெறுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. குறிப்பாக ₹10 லட்சம் மதிப்பிலான அரசுப் பணிகளுக்கு வெறும் 2 நாட்களும், 50-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு வெறும் 7 நாட்களும் மட்டுமே அவசர அவசரமாகக் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது முறைகேடு குறித்த சந்தேகத்தை மேலும் வலுவாக்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ள அவர், அரசுப் பணிகளுக்கு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் தருவதன் மர்மம் என்ன? அரசுத் துறைகளில் ஆன்லைன் டெண்டர் முறை அமலில் இருக்கும் சூழலிலும், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் உள்நோக்கத்துடன் 'சிறப்பு நிபந்தனைகள்' விதிக்கப்பட்டது ஏன்? ஆன்லைன் போர்ட்டலின் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தித் துறைசார்ந்த அதிகாரிகளும், ஆதிக்கம் செலுத்தும் ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களும் கைகோர்த்து 'சிண்டிகேட்' அமைத்து மற்ற தகுதியான ஒப்பந்ததாரர்களைத் தடுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை எனச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக பாஜக தலைமை மாற்றமா? வானதி சீனிவாசனுக்கு பதவி? டெல்லியில் தீவிர ஆலோசனை!!
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நேரடி கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் டெண்டர் ஆவணங்களை முழுமையாக மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முறைகேடுகள் நடந்தது உறுதியானால், விதிமீறல்களுக்கு உள்ளான அனைத்து டெண்டர்களையும் உடனடியாக முழுமையாக ரத்து செய்துவிட்டு, அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில் போதிய கூடுதல் கால அவகாசத்துடன் புதிய வெளிப்படையான மறு டெண்டர் விட அரசு உத்தரவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: எல்லா அமைச்சர்களும் வாங்குறாங்க! தவெக அமைச்சர்கள் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!