2021 தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே இத்தொகை வழங்கப்படுவதாக 2023 சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று, காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பெயரிடப்பட்டு, பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டது. மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்களாக முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? "உதயசூரியன்"... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஃபயர் ஸ்பீச்!

மார்ச் முடிவில் 1 கோடியே 15 லட்சத்து 27 ஆயிரத்து 172 பயனாளிகள் பயனடைந்தனர். இதில் 14,723 இலங்கைத் தமிழர் முகாம் வாழ் மகளிரும் அடங்குவர். இவர்களில் 1.27 லட்சம் பயனாளிகள் அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தமை மற்றும் உயிரிழப்பு போன்ற காரணங்களால் நீக்கப்பட்டு, மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சமாகக் குறைந்தது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.,5 ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கும் குறைவான புன்செய் நிலம் வைத்திருக்க வேண்டும்., ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்த வேண்டும்.,அரசு அல்லது பொதுத்துறை ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர் போன்றவை வைத்திருப்போர் தகுதியற்றவர்கள் என்று கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. தற்போது அந்த கட்டுப்பாடுகளில் மூன்று தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் எனவும் விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பாக்குறதுலாம்... திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய எச். ராஜா!