கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு அலுவலகம் அருகே எரிந்த நிலையில் காகிதங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துண்டு துண்டாக்கப்பட்ட நிலையில் காகிதங்கள் எரிக்கப்பட்டுள்ளதால் சந்தேகத்தைக் கிளப்பி உள்ளன. வழக்கு சிபிஐக்கு மாறி உள்ள நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று அலுவலகத்தை காலி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றுடன் அலுவலகத்தை காலி செய்வதால் தேவையற்ற காகிதங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எரிக்கப்பட்ட காகிதங்களுக்கு அருகில் பென்டிரைவ் ஒன்றும் கிடைக்கப்பெற்று இருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு என தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

விசாரணை முடியும் முன்னரே வழக்கு தொடர்பான காகிதங்களை அழிப்பதற்கு அனுமதி தந்தது யார் என்றும் பென்டிரைவைக் கூட விசாரணை நடத்தப்பட்ட இடத்தில் வைத்தே எரிக்கும் அளவிற்கு அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது என்றும் கேட்டுள்ளார். அவசரகதியில் சிறப்புப் புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி அதனை உச்ச நீதிமன்றம் தடைவிதித்த உடனேயே ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது ஏன் என்றும் உச்ச நீதிமன்றமோ அல்லது ஏதேனும் சட்டமோ ஆவணங்களை அழிக்க வேண்டும் என்று கூறுகிறதா எனவும் கேள்வி எழுப்பினார். விசாரணை முடியும் முன்னரே சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை ஒருதலைபட்ச கருத்துகளை ஆர்வமாகத் தெரிவித்த நிலையில், தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது எதனை மறைக்க., யாரைக் காப்பாற்ற இது போன்ற செயலில் ஈடுபட்டதாக அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!
கரூர் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்குத் திமுக அரசு முதலில் மறுத்தது, சட்டசபை வளாகத்தில் வைத்தே அமைச்சர்கள் அவசரகதியாக மாற்றி மாற்றி கருத்துகளைத் தெரிவித்தது, தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது என இவையனைத்தும் திமுக அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதையே சுட்டிக் காட்டுவதாகவும் ஆனால் உண்மை உறங்காது என்றும் தமிழக பாஜக உறங்கவும் விடாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே, வழக்கம் போல வாய்ப்பூட்டு அணிந்து திசைதிருப்பு நாடகங்களில் ஈடுபடாமல் ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக திமுக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கரூர் மக்களுக்கு விஜய் மேல எந்த கோபமும் இல்ல.. அத அவங்களே சொல்லிட்டாங்க..!! அருண்ராஜ் தகவல்..!