கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று ஆஜராகி உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் துயரம்… தவெக தலைவர் விஜய் ஆஜர்... சிபிஐ துருவித் துருவி விசாரணை..!
டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ள விஜய்யிடம் நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் நடந்தது என்ன? தாமதத்திற்கு என்ன காரணம்? கூட்ட நெரிசல் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா? தொடர்ந்து கூட்டத்தில் பேச அனுமதித்தது யார்? பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விவரங்கள் சம்பவம் நிகழ்ந்ததும் தெரிவிக்கப்படவில்லையா? உள்ளிட்ட என்பதுக்கும் மேற்பட்ட கேள்விகளை விஜய்யிடம் அதிகாரிகள் எழுப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் அளிக்கும் பதிலைப் பொறுத்தே அவருடைய பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதா இல்லையா என்பது குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிபிஐ வளையத்தில் விஜய்... கரூர் துயரம் குறித்த விசாரணைக்காக தலைநகருக்குச் சென்ற தவெக தலைவர்...!