திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆங்கரை பகுதியில், ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லால்குடி அருகே உள்ள ஆங்கரை, சகாய மாதா கோவில் அருகே வசித்து வருபவர் கிறிஸ்துராஜ். இவர் லால்குடி பகுதியில் கணினி மையம் (Computer Center) ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இன்று காலை ஆறு முப்பது மணியிலிருந்து கிறிஸ்துராஜின் வீட்டிற்குள் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், வெளிஆட்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு பாதுகாப்பை பலப்படுத்திவிட்டு சோதனையைத் தொடங்கினர்.
இதையும் படிங்க: நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!
ஆசிரியர் தகுதி தேர்வில் 50 கோடி கைமாறியாக தகவல் அடிப்படையில் கிறிஸ்துவராஜ் 26 வது குற்ற வழியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சோதனையின் போது, அவரது கணினி மையச் செயல்பாடுகள், வங்கிப் பரிவர்த்தனைகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதித் தொடர்பான விவரங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் இவருக்கு உள்ள தொடர்பு என்ன? சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஏதேனும் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சோதனையில் அமலாக்க துறையினர் மொத்தம் நான்கு பேர் மூன்று ஆண்கள் ஒரு பெண் அதிகாரி 2 சி ஆர் பி எப் காவலர்கள் என மொத்தம் ஆறு நபர்கள் வந்துள்ளனர்.
தற்போது வரை இந்தச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தோ அல்லது சோதனையின் பின்னணியில் உள்ள முழுமையான விவரங்கள் குறித்தோ அமலாக்கத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடு வழக்கில் லால்குடியில் அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள பிற கல்வி நிறுவனங்கள் மற்றும் கணினி மைய உரிமையாளர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரப்பான் பூச்சி அமைப்பிற்கு பின்னால் இவர்களா?... அகில இந்திய அரசியல் பின்னணியை அம்பலப்படுத்திய மாணிக்கம் தாகூர்...!