சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெயர்களை, அரசு ஆவணங்களில் உள்ளபடியே அனைத்து ஆவணங்களிலும் குழப்பமின்றி பயன்படுத்த உத்தரவிடக் கோரிய ஒரு பொதுநல மனுவைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று விசாரித்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட இயலாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததோடு, மனுதாரர் ஆஜராகாததால், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், "சுதந்திரத்திற்காகப் போராடிய பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவரின் பெயர் அனைத்து அரசு ஆவணங்களிலும் மற்றும் தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத் திட்டப் புத்தகங்களிலும் தற்போதுவரை 'பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்' என்றே இடம்பெற்று வருகிறது.
ஆனால், கடந்த 14-09-2024 அன்று நடைபெற்ற குரூப் 2 பிரிவிற்கான தேர்வின் வினா எண் 104-இல், 'ஆங்கில அரசால் 'வாய்ப்பூட்டுச் சட்டத்தின்' மூலம் மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர்' என்ற வினாவுக்குக் கொடுக்கப்பட்ட விடைகளில் ஒன்றாக, 'முத்துராமலிங்கனார்' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதே வினாத்தாளில் வினா எண் 87-ற்கான விடைகளில் 'கஸ்தூரி ரங்க அய்யங்கார்' என்றும், வினா எண் 92-க்கான விடைகளில் 'ஜி.பி. பிள்ளை' மற்றும் 'ஜி. சுப்பிரமணிய ஐயர்' என்றும் தலைவர்களின் பெயர்கள் முழுமையாக உள்ளன.
இதையும் படிங்க: சென்னையை கவரும் Wonderla..!! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த உலகத் தர பொழுதுபோக்கு பூங்கா!
எனவே, தற்போது அரசு ஆவணங்களில் உள்ள பெயர்களின்படியே, அனைத்துத் தலைவர்களின் பெயர்களும் பொது வெளியில் பயன்பாட்டில் உள்ளபடியே உள்ள அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, "அரசின் கொள்கை முடிவில் தலையிட இயலாது" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், மனுதாரர் ஆஜராகததால், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: லஞ்சப் புகார் மற்றும் அலைச்சல் இல்லை.. புதிய கார்-பைக் பதிவுக்கு RTO விதிமுறையில் புதிய மாற்றம்!