தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் முறை தொடர்பான விவகாரம் சமீப காலமாக பெரும் விவாதத்திற்குள்ளாகி வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்ற நிகழ்ச்சி உள்ளிட்ட சில அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது பெரும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் நீண்டகால மரபை மீட்டெடுக்கவும் அதற்கான நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்கவும் கோரி அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய வாதங்களில் ஒன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பானது. அந்த சுற்றறிக்கையில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தை முதலில் பாட வேண்டும் என்றும் அடுத்து தேசிய கீதத்தை பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் ஆனால் மாநில பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்க எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு பெறும் மரபு இருந்து வருவதாகவும் அந்த மரபை பாதுகாக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விளக்கம் அளித்தார். மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வேண்டும் என்று எங்கும் வற்புறுத்தப்படவில்லை என்றும் அதில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும் அடுத்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

மாநில பாடல் தொடர்பாக எந்தவிதமான உத்தரவும் அல்லது திசையும் மத்திய அரசால் பிறப்பிக்கப்படவில்லை என்பதும் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.இந்த விளக்கம் தமிழகத்தில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலிலிருந்து எடுக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டிலேயே தமிழக அரசு இதை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பின்னர் 2021ஆம் ஆண்டில் இது மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நீண்டகால நடைமுறை சில சமயங்களில் மாற்றத்திற்கு உள்ளாவது தமிழக மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான எதிர்வினையை ஏற்படுத்தி வருகிறது.இதே நாளில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அனைத்து கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் கட்டாயமாக பாடப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக இந்தப் பாடல் இருப்பதாகவும் அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இது அமைவதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் அளித்த விளக்கம் இந்த விவகாரத்தில் ஒரு முக்கியமான தெளிவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாநில பாடலை எப்போது பாட வேண்டும் என்பதில் மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை என்றும் மாநில அரசு தனது மரபையும் நடைமுறையையும் பின்பற்ற இடமுள்ளது என்றும் அர்த்தப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.17 கோடி வருமானம், ரூ.11 கோடி முதலீடு கணக்கில் காட்டவில்லையா? கே.என்.நேருவுக்கு நோட்டீஸ்!