சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பன்னடுக்குக் குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சதுப்பு நிலப் பாதுகாப்பு குறித்த வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தையே அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தினர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரம்மாண்டக் குடியிருப்பு வளாகம் கட்ட அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு எவ்விதக் கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த பிரஸ்னவ் மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாகப் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதன் அடிப்படையில், சதுப்பு நிலப் பகுதிகளைத் துல்லியமாக வரையறை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வழக்கு வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது" என்று விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் SIR பணிகள் விறுவிறு..!! மேலும் 10 நாட்கள் அவகாசம்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும்போது, உயர்நீதிமன்றத்தில் அதற்கு இணையான விசாரணையை நடத்த முடியாது என்று குறிப்பிட்டனர். எனவே, மனுதாரர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தையே அணுகலாம் எனக் கூறி, அதிமுக நிர்வாகி மற்றும் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவின் காரணமாக, பள்ளிக்கரணை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை தானாகவே நீங்கியுள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மனுதாரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இது என்ன கும்பல் ஆட்சியா? உச்சநீதிமன்றத்தில் மமதா பானர்ஜியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய துஷார் மேத்தா!