முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி அளிப்பது தொடர்பான கோப்புகளை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து ஓய்வுபெற்ற பொதுத் துறைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.98 கோடி மதிப்புள்ள டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணை செய்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

வழக்கு விசாரணையின் போது நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த கருத்துகள் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க அனைவரும் முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரும் கோப்புகளை இவ்வளவு காலம் நிலுவையில் வைத்திருந்ததற்குச் சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றைக் காரணங்களாகக் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதையும் படிங்க: அதிமுகவில் அதிரடி மாற்றம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி!
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி அளிப்பது தொடர்பான கோப்புகள் தாமதமானதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஓய்வுபெற்ற பொதுத் துறைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் அடுத்த விசாரணையின் போது காணொலிக் காட்சி வாயிலாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்றம் காட்டி வரும் இந்த அதிரடி கெடுபிடி, அரசியல் மற்றும் அதிகாரி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோகுல்ராஜ் வழக்கு வழக்கறிஞருக்கு கட்டண பாக்கி! 4 வாரங்களில் வழங்க அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!