மதுராந்தகம்: மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் ஆணையம் கடந்த 7-ம் தேதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து செப்டம்பர் 16-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். தேர்தல் நடத்தும் அலுவலராக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுராந்தகம் தொகுதிக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் அரசியல் கட்சிகளிடையே தேர்தல் பணிகள் வேகம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: குதிரை பேரம் நடத்தியது யார்? அந்த ஹோட்டலில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்தது யார்? ஆதவ் அர்ஜுனா நேரடி கேள்வி!
முக்கிய கட்சிகள் இதுவரை தங்களது வேட்பாளர்களை இறுதி செய்து அறிவிக்காத சூழலில், தேர்தல் களத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் முதற்கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கும்போது தேர்தல் போட்டி மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க தொகுதி முழுவதும் 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுப்பதுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தனியார் இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்களையும் 72 மணி நேரத்துக்குள் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரசாரக் கூட்டங்கள், ஒலிபெருக்கி பயன்பாடு, வாகனங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் SUVIDHA செயலி மூலம் முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் C-Vigil செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: Fake ID உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!