மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் துரை வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல், துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து பின்னர் அதை வாபஸ் பெற்றதன் மூலம் வெளிப்பட்டது. மல்லை சத்யா, மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும், கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருப்பவர், கட்சியில் துரை வைகோவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் வாரிசு அரசியல் குறித்து அதிருப்தி தெரிவித்தார். வைகோவின் மகனான துரை வைகோ, கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து, 2024இல் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த மோதலின் பின்னணியில், சமூக வலைதளங்களில் மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் மற்றும் துரை வைகோவின் ஆதரவாளர்கள் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்தனர். மல்லை சத்யா, வைகோவை தனது உயிரை மூன்று முறை காப்பாற்றியவர் என்றும், தன்மீது துரோகி என்ற பழி சுமத்தப்பட்டது தாங்க முடியாத மனவேதனையை அளித்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

வைகோ, மல்லை சத்யாவை தனது உடன்பிறவாத் தம்பியாக நினைத்ததாகவும், ஆனால் அவரது சமீபத்திய செயல்பாடுகள் கட்சிக்கு எதிராக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் மாத்தையா போல மல்லை சத்யாவும் துரோகம் செய்ததாக ஒப்பிட்டார். மோதல் மீண்டும் தீவிரமடைந்தது, மல்லை சத்யா தன்னை கட்சியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டினார். இவர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் மதிமுகவிலிருந்து மல்லை சத்யாவை தற்காலிகமாக வைகோ நீக்கினார். கட்சிக்காக பயிர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி அவரை சஸ்பெண்ட் செய்ததுடன் தம்மிடம் உள்ள மதிமுக உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்க கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்! வைகோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இந்த நிலையில், மல்லை சத்யா 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி, கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி மல்லை சத்யா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிமுக விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் எழுத்து பூர்வ விளக்கம் தர வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ப்ளீஸ்... மோடி உடனே தலையிடுங்க” - 1.65 லட்சம் மக்கள் கொத்து, கொத்தாக மரணம்... வைகோ உருக்கமான கோரிக்கை...!