தங்களை ஒரு 'தூய சக்தி' எனப் பாசாங்கு செய்பவர்களின் உண்மையான முகமூடியைக் கிழித்து, தவெக அரசு நடத்தி வரும் ஜனநாயக விரோதக் குதிரை பேர நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்துப் புகார் அளித்துள்ளேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் ஆளுநரைச் சந்தித்துப் புகார் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், கடந்த மே 8-ஆம் தேதி இரவே சட்டமன்ற உறுப்பினர்களை வளைக்கும் குதிரை பேரம் முழுவீச்சில் தொடங்கிவிட்டது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சிக்கு வரவிருப்பதாக செங்கோட்டையன் உள்ளிட்டோர் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். எந்த அடிப்படையில் அவர்கள் வருகிறார்கள்? என்ன பேரம் பேசப்படுகிறது? என்ன ஆசை காட்டி அழைக்கிறார்கள்? அவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்போகிறார்களா? பண ஆசையும் பதவி ஆசையும் காட்டி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆளுங்கட்சிக்கு மாற்றுவதும், ராஜினாமா செய்ய வைப்பதும் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்று ஆவேசமாகச் சாடினார்.
இதையும் படிங்க: விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!
மேலும் அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்த அவர், ஜனநாயகத்தை நிலைநாட்டவும், எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்படுவதைத் தடுக்கவும் ஆளுநரிடம் விரிவான ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளேன். இந்தப் புகார் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். ஊத்தங்கரை எம்.எல்.ஏ அளித்த புகாரின் மீது மட்டும் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்த இந்த அரசு, இதே விவகாரத்தில் நான் அளித்த புகார் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஓட்ட தெரியாத ட்ரைவர் கையில் தமிழ்நாடு! தவெக அரசை விளாசிய துரைமுருகன்!