குறிப்பிட்ட தொழில் மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் பிரதானமான நகரமாக இருந்து வருகிறது வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு குடிப்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாணவர்கள் தொடங்கி வேலை பார்ப்பவர்கள் என ஒவ்வொருவரும் தன் கனவை நிறைவு செய்து கொள்வதற்காக சென்னையைத் தேடி ஆண்டதோறும் வந்து கொண்டே இருக்கின்றனர்.

அந்த வகையில் எதையும் தாங்கும் இதயம் போல் சென்னையும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு கூட்டாக குவியும் மக்களை தாராளமாக கையை விரித்து அணைத்துக் கொள்கிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாலடி இருக்கும் இடத்தில் 100 பேர் தங்கும் சூழலை உருவாக்கி வருகிறது என்றே சொல்லலாம். இதனால் விலை மானியங்கள், பொருட்களின் தேவைகள் என அனைத்தும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேரா..!! அசர வைக்கும் CMRL ரிப்போர்ட்..!
மக்கள் தொகையால் நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் வருவதையும் தடுக்க முடியாது அதே சமயத்தில் மக்களின் அத்தியாவசியத்தையும் நிறைவேற்றாமல் இருக்க முடியாது என கருதி வளர்ச்சி திட்டத்தில் ஒன்றான மெட்ரோ திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி தப்பிக்க ஒரு பெரும் உதவியாக அமைந்துள்ளது.
முன்னதாக 2015 ஆம் ஆண்டு சென்னையில் மெட்ரோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் பயனாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவானதாகவே இருந்தது. ஆனால் அதன் பயனும் அதன் சிறப்பு அம்சங்களும் நாளடைவில் மக்களை தன்வசப்படுத்தியது. குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல தவித்த மக்கள் மெட்ரோ திட்டத்தினால் அதனை எளிதாக்க முடிந்தது. இதனால் மெட்ரோவின் பயனாளர்கள் மல மலவென அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமான உயர்வை கண்டது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பழைய பயண அட்டைகளை (CMRL Travel Card) முழுமையாக நிறுத்தி, தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC - சிங்கார சென்னை அட்டை) மாறுவதாக அறிவித்துள்ளது. இதன்படி, சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பழைய பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. இருப்பினும், க்யூஆர் குறியீடு பயணச்சீட்டுகள் மற்றும் பிற டிக்கெட் முறைகள் வழக்கம்போல் தொடரும்.

பயணிகள் தங்கள் பழைய பயண அட்டைகளை மெட்ரோ நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து, அதில் உள்ள வைப்புத் தொகை மற்றும் மீதமுள்ள இருப்புத் தொகையை சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த மாற்றத்திற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. சிங்கார சென்னை அட்டை, எஸ்பிஐ உடன் இணைந்து NCMC திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது, இது அதிகபட்சம் 2000 ரூபாய் வரை சேமிக்கக்கூடியது.
இந்த மாற்றம், பயணிகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதற்காகவும், நவீன டிஜிட்டல் கட்டண முறைகளை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகளின் வசதிக்காக க்யூஆர் குறியீடு, வாட்ஸ்அப், பேடிஎம், போன்பே ஆகியவற்றின் மூலம் 20% கட்டணத் தள்ளுபடியை வழங்கி வருகிறது. பயணிகள் இந்த மாற்றத்திற்கு தயாராகி, புதிய அட்டையைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேரா..!! அசர வைக்கும் CMRL ரிப்போர்ட்..!