முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் கோவில்களை ஆய்வு செய்து அதில் முறைகேடுகள் இருந்தால் அந்த கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை கும்பகோணம் அருகே சுவாமி மலையில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மின் தூக்கிகளை அமைச்சர் சேகர்பாபு ,உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் ஜவாஹிருல்லா,ஆகியோர் இன்று காலை திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபட்டனர் அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் கோவில்களை ஆய்வு செய்து அதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது உறுதியானால் அந்த கோவில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும், முறையாக பராமரிக்கப்படும் தனியார் கோவில்களை அரசு ஏற்கும் திட்டம் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்கள் அனைத்திற்கும் தேவையான அனைத்து வசதிகளும் திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது என்றும், 2028ம் ஆண்டில் கும்பகோணம் நகரில் நடைபெறும் மகாமக விழாவிற்கு முன்னதாக இங்குள்ள அனைத்து கோவில்களின் குடமுழுக்கு விழாக்கள் நடைபெறும் என்றும் மகா மகம் நடைபெறும் 2028ம்ஆண்டு திமுக தான் ஆட்சியில் இருக்கும் என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
மகாமகம் விழா தொடர்புடைய கோவில்களில் ஒன்றான பானாதுறை பானபுரீஸ்வரர் ஆலயத்திற்கு தேர் அமைக்கப்படும் என்றும் சேகர் பாபு அப்போது தெரிவித்தார். கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் மின் தூக்கி அமைக்கப்பட்டு இருப்பது 30 ஆண்டுகால கோரிக்கையை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி உள்ளது என்று சேகர்பாபு தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் எதையாவது ஒன்றை கையில் எடுத்து அரசியல் செய்யலாம் என காத்துக் கிடக்கும் சங்கிகளுக்கு இடம் கொடுக்காமல் சிறப்பான முறையில் குடமுழுக்கு செய்து காட்டியுள்ளோம் என்று சேகர் பாபு தெரிவித்தார். நடிகர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் கருத்து கேட்டதற்கு அதை பெண்களிடம் கேளுங்கள் என பதில் அளித்தார்.
மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி பெண்கள் என சுவாமி மலையில் 60 படிகளில் ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு சிரமமாக உள்ளதை கருத்தில் கொண்டு சட்டமன்றத்தில் சுவாமி மலையில் மின் தூக்கி வேண்டுமென கோரிக்கை விடுத்தேன். இதற்கு ஒப்புதல் வழங்கி இன்று திறப்பு விழாநடைபெறுவதற்கு முழு உதவியாக இருந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தனது பேட்டியில் தெரிவித்தார்
முன்னதாக சுவாமி மலையில் மின் தூக்கி திறப்பு நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ,பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா,கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??