தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசின் முடிவுக்குக் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இந்த விலையேற்றம் சாமானிய மக்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் செயல் என்று அவர் சாடியுள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஜோதிமணி எம்.பி கூறியதாவது, தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு, வாக்குப் பதிவு முடிந்த அடுத்த சில நாட்களிலேயே சிலிண்டர் விலையை உயர்த்தியதன் மூலம் பிரதமர் மோடி தனது உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறார்.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் திணறி வரும் நிலையில், இந்த எரிவாயு விலை உயர்வு மக்களின் முதுகெலும்பை உடைக்கும் செயலாகும். மக்களால் இதற்கு மேல் விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது.
இதையும் படிங்க: தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!
சிலிண்டர் விலை உயர்வதால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும்; இது மறைமுகமாக அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும்.
மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த வணிக சிலிண்டர் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மக்கள் விரோதப் போக்கை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்தால், அதற்குரிய பாடத்தைத் தேர்தல் முடிவுகள் புகட்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக அதிகரிக்கப்பட உள்ள நிலையில், இந்த விலை உயர்வு அறிவிப்பு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!