தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் என விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. கஞ்சா போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவலர்களின் பாதுகாப்பையும் போதைப் புழக்கம் பறிக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை முதலமைச்சரின் துருப்பிடித்த இரும்புக்கரம் சீரழித்துள்ளது என்றும் கூறினார். திருப்பூர் மாவட்டம் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் காவலரை மதுபோதையில் இருந்த நபர் கத்தியால் தாக்க முயற்சிக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
பாட்டிலுக்குப் பத்து ரூபாய் அதிகம் விற்று கட்சியின் கஜானாவை நிரப்பத் திட்டமிடும் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தெருதோறும் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு, குற்றங்களைப் பல்கிப் பெருகவிட்டு மக்களுக்குத் துளியும் பாதுகாப்பில்லாத நிலை நிலவி வருகிறது என சரமாரியாக சாடினார்.
இதையும் படிங்க: “திருச்சியில் அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்!” - நயினார் யாத்திரை நிறைவு விழாவில் காத்திருக்கும் 'சர்ப்ரைஸ்'!
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாகத் தற்போது மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை முதலமைச்சரின் துருப்பிடித்த இரும்புக்கரம் சீரழித்துள்ளது என்று விமர்சித்து உள்ளார். போதையில் தள்ளாடவிட்டு, பேரழிவில் தமிழகத்தை நிறுத்திவிட்டு, போதையில்லாத் தமிழகம் எனப் போலியாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசின் மமதைக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் தமிழகம் மீட்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழகத்தின் மாபெரும் தலைவர் கேப்டன்" - விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக தலைவர்கள் உருக்கம்!