நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடுமையாகப் பொய்த்ததால் தேயிலைத் தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் ஏ.வி.டி. குழுமத்தின் நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சார்ந்த சட்டன், லூசியானா, பவானி, காட்டேரி, வாட்டர்பால் உள்ளிட்ட எஸ்டேட்டுகளிலும், கோத்தாரி நிறுவனத்தின் கிரேக்மோர், வுட்லேண்ட்ஸ், மானார், பழனியப்பா, தைமலை, சாம்ராஜ், கோரக்குந்தா, சன்னிசைடு, ஆலாடா வேலி, குன்னக்கொம்பை, பில்லி மலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகளிலும் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒரு ஏக்கரில் மாதந்தோறும் சுமார் 500 கிலோ பசுந்தேயிலை கிடைக்கும் இடங்களில் தற்போது 200 கிலோ அளவுக்கே வரத்து உள்ளது. மண்ணின் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்ததால் இளம் தளிர்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக மழை பெய்துவிட்டு நீண்ட வறண்ட காலம் நீடிப்பது இயல்பாகிவிட்டதால் தேயிலைச் செடிகளின் வளர்ச்சி தடைபடுவதாகத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தென்மேற்கு பருவமழையில் சுமார் 55 சதவீதப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது. சூப்பர் எல் நினோ தாக்கத்தால் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு குறைந்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ஆண்டு உற்பத்தி 7-8 டன் வரை இருந்தது 50 சதவீதம் வரை சரியும் அபாயம் உள்ளது.நீலகிரி பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தேயிலைத் தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நம்பியுள்ளன.
இதையும் படிங்க: கூடலூரில் பந்த்... ஆட்கொல்லி புலிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு...! முடங்கிய நகரம்..!!

தொழிலாளர்களுக்கு வேலை நாட்கள் குறைவதால் அவர்களின் வருமானம் பாதிக்கப்படும் என தொழிற்சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். சிறு தேயிலை விவசாயிகள், தொழிற்சாலைகள் மற்றும் அதனைச் சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. மலைக் காய்கறி சாகுபடியும் இதே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினரும் விவசாயிகளும் அரசை நோக்கிக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தற்போதைய நிலையை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தேயிலை விவசாயிகளைப் பாதுகாக்க நீண்டகால திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மழை நிலை மேம்படாவிட்டால் நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதையும் படிங்க: இளைஞர்களை புறக்கணிக்கும் மத்திய அரசு..! துணை போகிறதா தமிழக அரசு.? வேல்முருகன் கேள்வி.!!