தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்திய அரசின் பங்குகளை என்.எல்.சி. இந்தியா (NLC India) நிறுவனத்தில் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று விரிவான கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 2 சதவீத அடிப்படை பங்குகள் மற்றும் 1 சதவீத கூடுதல் பங்குகளுக்கான ஒதுக்கீட்டு விருப்பம் (கிரீன் ஷூ ஆப்ஷன்) உள்ளிட்ட மொத்தம் 3 சதவீத பங்குகளை ‘விற்பனைக்கான சலுகை’ மூலம் விற்பனை செய்ய இந்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டத்தின் மீது தமிழ்நாடு அரசு தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்துள்ளது.
மேலும், இந்திய அரசின் பங்குகளை எந்த அளவிலும் மேலும் குறைக்கும் எந்த முடிவையும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக எதிர்க்கிறது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய செயல்பாடுகள் அனைத்திலும் தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இந்நிறுவனத்தின் தலைமையகம் நெய்வேலியில் அமைந்துள்ளதாகவும், சுரங்கம்-I, சுரங்கம்-IA, சுரங்கம்-II உள்ளிட்ட முக்கிய பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் தொடர்புடைய அனல் மின் நிலையங்கள் இங்கேயே செயல்படுவதாகவும் வலியுறுத்தினார். மாநில அரசின் விரிவான உள்கட்டமைப்பு ஆதரவு, நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் பல தசாப்தங்களாக இந்நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“என்.எல்.சி. இந்தியா வெறும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் அல்ல; எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் தேசிய உள்கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய சொத்து” என்று வலியுறுத்திய முதலமைச்சர், இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை குறைப்பது பொதுவுடைமைத் தன்மைக்கு தவறான முன்னுதாரணம் வகுக்கும் என்றார். இந்நடவடிக்கை நிதி அம்சங்களுக்கு அப்பால், தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால நலன்கள் மற்றும் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை பாதிக்கும் என்றும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: அலி கமேனி மறைவு: இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு..!!
என்.எல்.சி. இந்தியா போன்ற நிறுவனங்கள் மாநில அரசின் தொடர்ச்சியான ஆதரவுடன் உருவாக்கப்பட்டவை என்பதால், அவை முழுமையாக அரசின் உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் நீடிக்க வேண்டும் என்ற கொள்கையை தமிழ்நாடு அரசு உறுதியாகக் கடைப்பிடித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். இந்திய அரசு தமிழ்நாட்டின் எண்ணங்களையும் கொள்கை ஆட்சேபனைகளையும் உரிய முறையில் பரிசீலிக்கும் என்று நம்புவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் எரிசக்தித் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக தன்னுயிர் ஈந்த உன்னத தலைவர்..!! டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்..!!