சிவகாசி மாநகராட்சி சிறுவர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் கடத்த முயன்ற அசாம் மாநில இளைஞர். சுற்றி வளைத்து சிறுமியை மீட்ட பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைப்பு
சிவகாசி கிழக்குப் பகுதி சேனையாபுரம் காலனியைச் சேர்ந்த செல்வி என்பவர் தனது சகோதரியின் 9- வயது மற்றும் 5- வயதுடடைய இரு பெண் குழந்தைகளுடன் காரனேஷன் காலனியிலுள்ள சிவகாசி மாநகராட்சி சிறுவர் பூங்காவில் பொழுதுபோக்குவதற்காக வந்துள்ளனர். அப்போது பூங்காவினுள் தனது அருகே விளையாடிக்கொண்டிருந்த நட்சத்திரா என்ற 5- வயதுப் பெண் குழந்தையை மது போதையிலிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிச் சென்று கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வி கூச்சலிட்டதால் பக்கத்திலிருந்த வர்கள் சம்பவம் பற்றிக் கேட்டறிந்து சிறுமியைக் கடத்திச் சென்ற வட மாநில இளைஞரைச் சுற்றி வளைத்துப் பிடித்து குழந்தையை மீட்டதுடன், அவருக்கு தர்ம அடி கொடுத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திமுக, அதிமுக ஆதரவோடு களமிறங்கும் சீமான்?! அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டி உறுதி! தவெகவுக்கு சிக்கல்!
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி கிழக்குக் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்த முயன்றது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மரிக்கொன் மாவட்டம் பரலிமரி கிராமத்தைச் சேர்ந்த மஸ்கித்துல் என்பதும், அவர் திருத்தங்கல் சாலையிலுள்ள பேக்கரிக் கடையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. குழந்தையை கடத்த முயன்ற அசாம் மாநில இளைஞரை பிடித்துச் சென்ற போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி மாநகராட்சி சிறுவர் பூங்காவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் சிறுமியை வட மாநில இளைஞர் ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் சிவகாசி வட்டார மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதுபோல்"..! தவெக அரசை விளாசிய பிரேமலதா..!!