அடிப்படை உரிமை கேட்டுப் போராடும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களைப் பெண்கள் என்றும் பாராமல் அடக்குமுறையை ஏவி கைது செய்வது கொடுங்கோன்மையின் உச்சம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராடும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களைப் பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையை மூலம் அடக்குமுறையை ஏவி சிறையில் அடைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் வாழ்வாதார உரிமையை வழங்க மறுக்கும் திமுக அரசு, அறவழியில் போராடக்கூட அனுமதி மறுப்பது கொடுங்கோன்மை என்றும் தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த பணியாளர்களாக ஏறத்தாழ 12000 சகோதரிகள் ஊரக நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட களப்பணியாளர்களாக ஒப்படைப்பு உணர்வோடு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அரும்பாடுபட்டு பணியாற்றி வருகின்றனர் என்று கூறிய சீமான், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முதுகெலும்பாகத் திகழும் ஊரக நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட பணியாளர்களின் பணி மிகுந்த போற்றுதலுக்குரியது என்றார்.

தங்களின் உடல் நலனைப் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் கடின உழைப்பைச் செலுத்தி அரசுக்கும் மக்களுக்கும் பாலமாகத் திகழும் சிறப்புமிக்க ஊரக நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட பணியாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கி, உரிய ஊதியம் வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயப் பொறுப்பும், கடமை என்று தெரிவித்தார். திமுக அரசு போராடும் திட்டப்பணியாளர்களுக்கு வாழ்வாதார உரிமைகள்தான் வழங்கவில்லை என்றும் குறைந்தபட்சம் உரிமைக்கேட்டு போராடக் கூட அனுமதி தர மறுப்பது அரச அடக்குமுறையின் உச்சம் எனவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: சீமான் சொல்வது பொய்..! தமிழ் தேர்வில் விலக்கா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!
அறவழியில் போராடுவது என்பது அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை., அதைக்கூட திமுக அரசு அனுமதிக்க மறுத்துப் பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையை மூலம் அடக்குமுறையை ஏவி, கைது செய்வது என்பது கொடுமை என்றார். இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா என்றும் வெட்கக்கேடு எனவும் சீமான் கூறினார்.
இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை கட்டாயப்படுத்துங்கள்...! அன்னை தமிழுக்கு துரோகம்... சீமான் ஆவேசம்..!