திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி சின்ன காளிபாளையத்தில் உள்ள பகுதிகளில், நாள்தோறும் சேகரிக்கப்படும் ஏறக்குறைய 700 முதல் 800 டன் அளவுள்ள குப்பைகளை கொட்டும் முயற்சியை அரசு செய்து வருவதாகவும், திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு மாறாக, குப்பைகளைத் தரம்பிரிக்காமல் பொதுவெளியில் கொட்டியதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றால் ஏறக்குறைய 3.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகும் திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
அரசின் இந்த செயலால் திருப்பூர் மாநகராட்சியின் முதன்மைச் சாலைகளான அனுப்புர்பாளையம் சாலை, காந்தி நகர், வேலம்பாளையம், அங்கேரிபாளையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அனைத்தும் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு மிகவும் துர்நாற்றம் ஏற்பட்டு பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.

இடுவாய் கிராமத்தில் குப்பைக் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடுவாய் மற்றும் சுற்றியுள்ள 5 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இடுவாய் சின்ன காளிபாளையத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை காவல் துறை தனது அடக்குமுறையால் பெண்கள் வயதானவர்கள் என்றும் பாராமல் கைது செய்து அடைத்துவைத்து குப்பையை மக்களுக்கு தெரியாமல் கொட்டும் செயலை செய்து வருவதாக சீமான் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மணல் திருட்டை எதிர்த்த விவசாயிகள் பொய் வழக்கில் கைது... நெஞ்சில் ஈரம் இருக்கா முதல்வரே?... சீமான் கண்டனம்...!
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை காலையில் கைது செய்து பின்னர் இரவு நேரங்களில் விடுவித்து பிறகு மீண்டும் கைது செய்யும் அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்றும் திருப்பூர் மாநகராட்சி உடனடியாக கழிவு மேலாண்மை விதிகளை முழுவதுமாக செயல்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியைத் திமுக அரசு உடனடியாகக் கைவிடுவதோடு, கிடங்கு அமைவதை எதிர்த்து போராடும் மக்கள் மீது ஏவப்படும் அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: வெட்கக்கேடு, அவமானம்... விளம்பரம் தேவையா முதல்வரே? பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்ட சீமான்...!