கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார்.
செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

அதிமுகவின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை செங்கோட்டையன் புறக்கணித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.
இதையும் படிங்க: ஆட்டம் காணும் எடப்பாடியின் "இரட்டை நாற்காலி"... உலுக்கியெடுக்கும் மூவர் அணி ...!
இருப்பினும் சமீபத்தில் செங்கோட்டையன் கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் தான் மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் பேசினார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருப்பவர் செங்கோட்டையன் என்றும் அவர் என்ன பேசப் போகிறார் என்று தானும் ஆவலோடு காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அதிமுகவின் மூத்த முன்னோடி செங்கோட்டையன் என்று கூறிய அவர் செங்கோட்டையனின் பேட்டிக்கு பின்னர் தனது கருத்தை தெரிவிப்பதாக ஓபிஎஸ் கூறினார்.
இதையும் படிங்க: 'பிளான் B’-யைக் கையில் எடுத்த சசிகலா... எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி எச்சரிக்கை...!