மகளிர் இலவச பேருந்து திட்டம் தமிழ்நாட்டில் திமுக அரசால் 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய சமூக நலத் திட்டம். பெண்களுக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவச பயண வசதியை வழங்கி பெண்களின் பயணச் செலவைக் குறைப்பதோடு, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தையும், பயண அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால் பெண்கள் இலவசமாக பயணிப்பதாக பேசி சிலர் இழிப்படுத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு பொதுக்கூட்டத்தில், இப்போ பஸ்ஸுல எப்படி போறீங்க? இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும்னாலும், வேற எங்க போனாலும் ஓசி பஸ்ஸுல தானே போறீங்க? என பேசி இருந்தார். இந்தப் பேச்சு பெண்களை இழிவுபடுத்துவதாகவும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இலவச பேருந்து திட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருக்கோவிலூர் திகில்.. பொன்முடிக்கு பதற்றத்தைக் கொடுத்த உதயநிதி மூவ்..!

தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், ஓசி பஸ் என குறிப்பிட்டு பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்துவது குறித்து பேசியபோது, பெண்கள் எல்லாரும் ஓசி பஸ்ல தானே போயிட்டு இருக்கீங்க, உங்க கிராமத்திற்கு ரோடு போட்டதும் ஓசில தான் போகப் போறீங்க என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும், பெண்கள் ஓசி பஸ்ஸில் பயணம் செய்யுங்கள் என்று பேசியதாகவும் தெரிகிறது.

இந்தக் கருத்துகள் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தை தவறாக சித்தரிப்பதாகவும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. இருப்பினும், இந்த சர்ச்சை தொடர்பாக மகாராஜனின் அதிகாரப்பூர்வ மறுப்பு அல்லது விளக்கம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. பெண்களின் இலவச பேருந்து பயணத்தை கொச்சைப்படுத்துவது தங்களை பெருமளவு பாதிப்பதாக பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனிடையே, மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்? வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக பேனரில் புறக்கணிக்கப்பட்ட பொன்முடி... உள்ளூரிலேயே மரியாதை போச்சு!!