பழனி தண்டபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலம் தொடர்பான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல், நெஞ்சுவலி மற்றும் ரத்த அழுத்தம் அதிகரித்ததாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பாக முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் நிலம், முறைகேடாக குறைந்த மதிப்பில் தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை தொடர்புடைய முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
தமிழக அரசின் உத்தரவின்படி, கடந்த ஜூலை 15-ம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முருகதாஸ், நிலத்தை வாங்கியதாக கூறப்படும் வெள்ளத்துரை, சேதுபதி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோர் கடந்த ஜூலை 29-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி வந்தார். அவர் மற்றும் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ராஜசேகர் தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கொடைக்கானலில் அவர் இருந்த இடத்தில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக ஜஸ்டின் மணிகண்டன் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவ பரிசோதனையில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட விடமாட்டோம்!" ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அமைச்சர் ரமேஷ் அதிரடி