திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த வழக்கில், கைது செய்யப்பட்ட சார்பதிவாளரின் ஜாமின் மனு மீதான விசாரணையை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஒத்திவைத்துள்ளது.
பழநி டி.கே.என். புதூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் பாப்பான்குளம் பகுதிகளைச் சேர்ந்த சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோரின் பெயர்களில், கோவில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் சுமார் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தரப்பிலும் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்
இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியன் சார்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட நிலையில் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவில், 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும், விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும் சார்பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை பெற வேண்டியிருப்பதாகவும், எனவே ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி கே. முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சக்தி சித்தார்த் ஆஜராகி வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, சார்பதிவாளரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ரூ.100 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் கோவில் நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரம், பழநி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் நீதிமன்றம் எத்தகைய உத்தரவை பிறப்பிக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பழனி கோவில் நில மோசடியை அடுத்து ஆயக்குடியிலும் கைவரிசை! கோவில் நிலங்களை குறிவைக்கும் கும்பல்?