தமிழ்நாட்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி அறிவியல், தோட்டக்கலை மற்றும் வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை கற்பிக்க, 2012-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 16,500-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். மேலும் இவர்களின் பணி தற்காலிகமானது என்று அரசு அறிவித்திருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் சுமார் 12,000 முதல் 13,000 பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் 12,500 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருவதுடன், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை அடுத்து 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக, பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் 377-வது வாக்குறுதியாக, உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் 100 நாளில் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தது.
இதையும் படிங்க: எதுக்கு எங்கள ஏமாத்துறீங்க? போராட்டத்தில் குதித்த பகுதி நேர ஆசிரியர்கள்... ஸ்தம்பித்தது போக்குவரத்து..!
ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதனால் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் அருகே கடந்த 8ம் தேதி போராட்டம் தொடங்கியது. 8வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், இன்று 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கையில் பதாகைகளை ஏந்தி முழுக்கங்களை எழுப்பியதோடு, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் உடனடியாக அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று அருகே நிறுத்தப்பட்ட போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் இன்று மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் வரும் 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.. மக்களுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..!