சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை மற்றும் கை, கால்கள் இல்லாத நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை பெரம்பூர் ரயில் நிலையத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்ட ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதிலிருந்து அதிகளவில் இரத்தம் கசிந்திருந்ததுடன், சடலம் அழுகிய நிலையிலும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்கு ஓட்டேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: ரீல்ஸ் வெறியால் தவெக எம்.எல்.ஏ. செய்த காரியம்... குறைகளை கொட்டித் தீர்க்க வந்த மக்கள் ஆத்திரம்...!
சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும், நடைமேடை எண் 4-இல் இருந்து வெளியே செல்லக்கூடிய பாதையிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும் விசாரணைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரயில்வே போலீசாரும், சென்னை மாநகர காவல்துறையினரும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட நபர் யார், கொலையில் ஈடுபட்டவர்கள் யார் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இன்று காலை முதல் சென்னை சென்ட்ரல், சென்னை பீச் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, நீல நிற சூட்கேஸை ரயில் நிலையத்திற்குள் கொண்டு வந்தது யார் என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் இரண்டு உதவி ஆணையர்கள், இரண்டு காவல் ஆய்வாளர்கள் மற்றும் நான்கு உதவி ஆய்வாளர்கள் அடங்கிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை முக்கிய துப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஆளுநர் உரைக்காக வெயிட்டிங்... காரணங்களை அடுக்கி தவெகவை டரியல் ஆக்கிய கொங்கு ஈஸ்வரன்...!