தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு சென்னை வந்தடைந்தார். நாளை சென்னையில் நடைபெறும் பல்வேறு தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
புதுச்சேரியில் இன்று மாலை அஜந்தா சிக்னல் முதல் அண்ணா சிலை வரை சுமார் 1.2 கி.மீ தூரத்திற்குப் பிரதமர் மோடி பிரம்மாண்டமான ரோடுஷோ நடத்தினார். அவருடன் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமரைத் தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாகப் பிரதமர் மோடி கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா (ITC Grand Chola) ஹோட்டலுக்குச் சென்றார். இன்று இரவு அவர் அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார். இதையொட்டி கிண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் 'ரெட் ஸோன்' (Red Zone) ஆக அறிவிக்கப்பட்டு, டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக அமித் ஷா கையில், திமுக கலைஞரிடமே இருந்தது! கரூரில் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நாளை காலை (ஏப்ரல் 04) ஐடிசி ஹோட்டலில் வைத்துத் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன், சட்டசபை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பிரதமரைச் சந்தித்துத் தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு, வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் மற்றும் கடைசி நேரப் பிரச்சாரத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, நாளை பிற்பகல் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்துப் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார். மேலும், சென்னையின் மற்றொரு பகுதியில் ரோடுஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமரின் இந்த இரண்டு நாள் வருகை பாஜக தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!