இந்தியாவின் பல மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். கடும் வெப்பம் காரணமாக உடல்நல பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், மக்கள் தேவையற்ற வெளிச்செல்லுதலை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வெயில் அனைவருக்கும் கடுமையான சவால்களை உருவாக்கி வருகிறது. எனவே மக்கள் அதிகப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது கட்டாயமாக தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வெயிலில் தவிக்கும் நபர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுப்பது கூட பெரிய மனிதநேய உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

தலைச்சுற்றல், வாந்தி உணர்வு, அதிக சோர்வு, பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார். யாரேனும் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால், உடனடியாக குளிர்ச்சியான நிழல் பகுதிக்கு அழைத்து சென்று தண்ணீர் அல்லது ORS வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாகவும், சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், வயதான பெற்றோர் மற்றும் உறவினர்களை அடிக்கடி தொடர்புகொண்டு அவர்களின் உடல்நிலையை கவனிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். மதிய நேர வெயிலில் வெளியே செல்லாமல் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கடும் வெப்பத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளையும் மறக்கக் கூடாது என்றும், வீடுகள் மற்றும் கடைகளின் வெளியே தண்ணீர் பாத்திரம் வைப்பது உயிர்காக்கும் உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!